Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, June 18, 2011

பாரதியும் யுகப் புரட்சியும் எழுதியவர் தோழர் தா.பாண்டியன்

பாரதியும் யுகப் புரட்சியும்

எழுதியவர் தோழர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு.
நன்றி: "பாரதியும் யுகப் புரட்சியும்" நிவேதிதா பதிப்பகம், அசோக்நகர், சென்னை 83.

பாரதி 1882 டிசம்பர் 11ஆம் நாளன்று தமிழ் நாட்டிலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.

அவர் பிறப்பதற்குப் பல்லாண்டுகட்கு முன்னரே, புலித்தேவன், முத்துவடுகநாதர், கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோர் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடி வெற்றி வெற முடியாமல் வீர மரணம் எய்தி விட்டனர்.

இவ்வீரர்கள் நெல்லை மாவட்டத்திலும், சிவகங்கைச் சீமையிலும், புலித்தேவன் மறைவுக்குப் பின்பும்தான் தங்களது போரை நடத்தினார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பும் இவர்கள் கதை கிராமங்களில் பாடப்பட்டு வந்தன.

இது 1857க்கு முன்னரே நடந்து விட்டது.

கேரள மாநிலத்தில் வேலுத்தம்பி என்ற வீரன் வெள்ளையரை எதிர்த்துப் போராடி மாண்டான்.

இவர்களது போர்களுக்குப் பின்னர் 1857இல் இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கிய முதல் சுதந்திரப் போராட்டம் எழுந்தது. ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் பெயர், பெண் தெய்வமான லக்ஷ்மியின் பெயரைக் காட்டிலும் உணர்வூட்டுகிற பெயராக நாட்டில் பரவியிருந்தது. பிறந்த பெண் குழந்தைகளுக்கு ஜான்சிராணி லக்ஷ்மி என்றே பெயர் சூட்டியும் வந்தனர்.

இதற்குப் பின்னர் விக்டோரியா மகாராணியின் பிரகடனம் வந்தது. வெள்ளையர்கள் ஆட்சியை விரிவுபடுத்தியும் உறுதிப்படுத்தியும் வந்தனர். வெள்ளையர்களை எதிர்த்துக் கிளம்பிய போராட்டங்கள் இரக்கமின்றி மிருகத்தனமாக நசுக்கப்பட்டன.

வெள்ளையர்கள் அடக்குமுறையை மட்டும் நம்பியிராமல் இந்நாட்டில் காணப்பட்ட பலவீனங்களைப் பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியையும் கடைப்பிடித்தனர்.

பாரதி பிறந்த 1882க்குள் வெள்ளையர் ஆட்சி இந்தியாவில் நன்றாக வேரூன்றி கோட்டையில் கொடிகட்டி உட்கார்ந்து விட்டது. ரயில் பாதை, சில புதிய தொழிற்சாலைகள், ஆங்கிலக் கல்வி, மேல் நாட்டுத் தொடர்பு, நடை உடை நாகரிகம், கிறிஸ்தவ மதம், கப்ப, ஆகியன இந்தியாவுக்கு வந்துவிட்டன.

இந்திய வெள்ளையர்கட்கு மூலப் பொருட்களை விளைவிக்கும் காடாகவும், உற்பத்தியான பொருள்களை விற்பதற்கான பெரும் சந்தையாகவும் மாறிவிட்டது. பொழுதெல்லாம் இந்தியாவின் செல்வம் கொள்ளை போய்க்கொண்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் 1789இல் புரட்சி நடந்தது. அது உறுதிப்படுத்திக் கொள்ள இயலாமல் சிதறிப் போய்விட்டது. இரண்டாம் முறையாக 1871இல் வெடித்த பாரிஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு விட்டது.

ஆனால், பிரெஞ்சுப் புரட்சி பற்றிய செய்தியின் வீச்சு உலகம் முழுமையிலும் பரவி இருந்தது. வால்டேர், லாக், ரூசோ ஆகியோர் எழுதிய நூல்கள் மேற்கத்திய நாடுகளில் புதிய எழுச்சிகளை ஏற்பட்த்தின. அந்நூல்கள் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பிரெஞ்சு புரட்சி என்ற நிகழ்ச்சியும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களும் மின் ஒளி போல உலகம் முழுவதிலும் பளிச்சிட்டுத் தெறித்தன.

இந்தியாவைப் பொறுத்த மட்டில் அது தேக்கம் நிறைந்த சமூக அமைப்புடன் மெல்ல உடலை வளத்து, முறுக்கிக் கொண்டு எழ முயன்று கொண்டிருந்தது. காங்கிரஸ் தோன்றிவிட்டாலும், அது படித்தோர் நடத்தும் மாநாடாக மட்டுமே இருந்து வந்தது. மக்கள் இயக்கமாக மாறப் போராடிக் கொண்டிருந்தது.

பாரதி பிறந்த எட்டயபுரமோ ஜமீந்தாரின் ஆட்சியில் இருந்தது. எட்டயபுரம் இன்றைக்கும்கூட வளமான செல்வம் கொழிக்கும் பூமி என்று கூறிவிடமுடியாது. எப்பக்கம் நோக்கினாலும் ஒரே கரிசல்மண். சூரிய வெப்பத்தால் வெந்தே கருகிப் போனது மாதிரி கிடக்கிறது. மழைக் காலத்தில் நடக்கவிடாமல் கரிசல் மண் களி மண்ணாக கால்களில் ஒட்டிக் கொள்கிறது. இதற்குச் சவால் விட்டு முளைக்கும் (உகண்டான்) பருத்தி ஒன்றரை அடி உயரத்தில் தன் ஆயுள் வளர்ச்சியை முடித்துக் கொள்கிறது.சுண்டைக்காயளவில் பருத்தி வெடிக்கிறது. பாக்கைத் தேடுவது மாதிரி அதனைப் பெண்கள் தேடிச் சேகரிக்கின்றனர்.

"கட்டுக் களங் காணும்,
கதிர் உழக்குக் காணும்,
மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டிப் போரடிக்கும்
அழகான தென் மதுரை"

என்ற பாடலுக்கும் எட்டயபுரம் பகுதிக்கும் சம்பந்தமே இல்லை.

இந்தப் புண்ணிய பூமியில் அவதரித்தவர்தான் பாரதி. கடுமையாக உழைத்து வாழும் மக்கள் மத்தியில் பிறந்து வளர்ந்த காரணத்தால், அவர்களை அவர் நன்கறிந்திருந்தார். அப்பகுதியில் மறவர்களும், நாயக்கர்களும் தாழ்த்தப் பட்டோரும் அதிகம். சமஸ்தானத்து வேலையில் மட்டும் சில பிராமணர்கள் இருந்தனர். சமஸ்தானத்தில் தமிழறிந்த புலவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மன்னனை அறிந்திருந்த அளவிற்கு மக்களைத் தெரிந்திருக்கவில்லை. பாரதிக்கு அவர்களுடைய பழக்கத்தால் தமிழ்ப் புலமையும், மக்களோடு பழகியதால் விசாலப் பார்வையும் துணிச்சலும், முயற்சியும், சமூக நீதிகளும் நன்கு புலப்பட்டன. பாரதியாரின் குடும்பம் அனுபவித்த பொருளாதாரச் சீரழிவும், துன்பங்களும் அவருக்கு, சமூகப் பொருளாதாரக் கேடுகளைப் பற்றிச் சிந்தித்து உண்மைகளைக் காணத் தூண்டுதலாக அமைந்திருக்கக்கூடும்.

பாரதி பிறந்து வளர்ந்து வந்த காலத்தில் தேசிய இயக்கமும் பரவி, வளர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்த இயக்கமாக வளர்ந்து வந்தது. இயற்கையாக, துடிப்புள்ள பாரதிக்கு தேசிய இயக்கத்தில் நாட்டம் பிறந்தது.

போராடும் தேசிய இயக்கத்தில் ஈடுபடுகிறவர்கட்கு வருகிற தொல்லைகள் பாரதிக்கும் வந்தன. அவை பாரதியை மேலும் புரட்சிகரச் சிந்தனைக்கே இட்டுச் சென்றன.

பாரதி பிறந்த வட்டாரச் சோழ்நிலை, பழகிய மக்களின் தன்மை, சார்ந்த இயக்கத்தின் போக்கு, சேர்ந்த பத்திரிகைத் தொழில் மூலம் கிடைத்த உலகச் செய்திகள் ஆகியன அனைத்தும் அவரை புரட்சிகரச் சிந்தனையை நாடுகிற மனிதனாக ஆக்கியிருக்கின்றன என்று கொள்ளலாம்.

பாரதிக்கு இருபத்திமூன்று வயதாகும்போது இந்தியா பத்திரிகையில் ஆசிரியராகப் பொறுப்பேறார். இருபத்தியிரந்தாம் வயதிலேயே அதாவது 1904இல் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

1905இல்தான் ரஷ்யாவில் ஜார் மன்னனை எதிர்த்த முதல் புரட்சி எழுந்தது. அது வெற்றி பெறவில்லை என்பது உண்மை. ஆனால், இது குறித்து 1906இல் பாரதியார் உற்சாகமாக 'இந்தியா' பத்திரிகையில் எழுதியிருப்பது வியப்புக்குரியது.

ரஷ்யாவில் இப்புரட்சிக்குப் பின்புதான் கறுப்பு நூற்றுவரின் கொடுங்கோன்மை அடக்குமுறை தாண்டவமாடியது. அதற்குத் தலைமை தாங்கிய காவலதிகாரி ஸ்டோலிபின் இறந்து போன செய்தியை பாரதி மகிழ்ச்சியுடன் வெளியிடுவது, அவர் ரஷ்யப் புரட்சிகர இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளதைக் காட்டுகிறது.

அதன் பிறகு 1914இல் முதல் உலகப் போர் தொடங்கி விடுகிறது.

1917இல் ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று விடுகிறது. லெனின் தலைமையில் முற்றிலும் புதிஅ அரசு ஒன்று தோன்றுகிறது. ஆனால் அப்புரட்சி பற்றிய முழுச் செய்தி இந்திய மக்களுக்கு எட்ட விடாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

அப்புரட்சியை இழிவுபடுத்தவும் அதைப் பயங்கரமாகப் படம் பிடித்துக் காட்டவும் அன்றைய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்திலிருந்து எதிர் மறையாகப் பொருள் கொண்டு சிலர் சில விஷயங்களைக் கிரகித்துக் கொண்டனர்.

ரஷ்யப் புரட்சி பற்றி பாரதி பாடியுள்ள பாடல் ரஷ்யப் புரட்சியின் மையமான போக்கைப் பாரதியார் புரிந்திருப்பதைக் காட்டுகிறது. அது நமக்கு இன்றைக்கும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

புதுச்சேரியில் பல தீவிரவாதிகள் தஞ்சம் புகுந்திருந்த காரணத்தால், அவர்களுடன் பல புரட்சிகர இயக்கங்கள் சம்பவங்களைப் பற்றிப் பாரதியார் விவாதித்திருக்கக் கூடும்.

பாரதியார் புதுச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்திருந்த காலத்தில் அரவிந்தரோடு நெருங்கிப் பழக்கமிருந்தது. பிரெஞ்சு நாட்டுப் பத்திரிகைகளும், புத்தகங்களும் இந்தியாவில் கிடைக்காது தடுக்கப்பட்ட செய்திகளையும் சேர்த்துத் தருவதாக இருந்தன. எனவே பிரெஞ்சுப் பத்திரிகைகள் வாயிலாக பல புரட்சிகர செய்திகளை பாரதி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் நாட்டிலிருந்து முதன் முதலாக ரஷ்யாவிற்குப் போனவர் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அகப்படமால், அனுமதி பெறாமல், ரஷ்யாவுக்குள் நுழைந்து லெனினைச் சந்தித்தவர். அப்போது ரஷ்யாவிலிருந்த எம்.என்.ராயுடன் சேர்ந்து தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயன்றவர்.

ஆனால் எம்.என்.ராயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரதிவாதி பயங்கரம் எம்.பி.திருமலாச்சாரி இந்தியா திரும்பி விட்டார். இவர் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்டு, பலாத்காரப் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டதால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருந்ததாக வ.ரா. எழுதியுள்ளார். ஆனால் அவர் இந்தியாவுக்குத் திரும்ப வந்தார். அரசியலைத் துறந்தார். இவர் புதுச்சேரியிலிருந்துதான் ரஷ்யாவுக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது.

திருவல்லிக்கேணியிலிருந்த இன்னுமொரு எஸ்.எண்.திருமலாச்சாரியும், சுரேந்திரநாத் ஆர்யா எனும் தெலுங்கரும், வி.சக்கரைச் செட்டியாரும், கோபால ஐயங்காரும், ஸ்ரீநிவாச அய்யங்காரும் துரைசாமி அய்யரும் பாரதியாரின் நண்பர்களாய் இருந்துள்ளனர். விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா தேவியாருடன் பாரதி பேசியதிலிருந்தும் பல விவரங்களைத் தெரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான ம.சிங்காரவேலருடன் பாரதியாருக்கு 1914 முதல் 1921 வரை நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது.

இத்தகைய நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தாலும் நடத்திய விவாதங்களினாலும் புரட்சி, ரஷ்யா, பொது உடைமை ஆகியன பற்றிப் பல புதிய விவரங்களைப் பெற்றிருக்கக்கூடும்.

உலகில் எங்கு புரட்சி நடந்தாலும், எங்கு விடுதலை முழக்கம் எழுந்தாலும் அவற்றை ஆவலோடு வரவேற்கிற துடிப்பு, தேசிய இயக்கத்தில் இருந்த ஒரு பிரிவினர்க்கு இருந்தது. அதற்குக் குரல் கொடுக்கும் மகா கவினனாக பாரதி இருந்திருக்கிறார்.

அயர்லாந்தின் விடுதலைப் போராட்டம், துருக்கியில் கமால் பாட்சா தலைமையில் நடந்த புரட்சி போன்றவை சுதந்திரப் போராட்ட வீரர்களை வெகுவாகக் கவர்ந்தன.

ஆனால், பாரதி மட்டுமா எட்டயபுரத்தில் அல்லது அது போன்ற சூழ்நிலையில் பிறந்தார்?

பாரதி மட்டும்தான் பத்திரிகை உலகில் ஈடுபட்டதால் உலகச் செய்திகளைத் தெரிந்து கொண்டார்.

பாரதி மட்டும்தானா பல நண்பர்களுடன் பழகினார்?

இக் கேள்விகலுக்கு விடை கூற முயன்றால் பாரதிக்கென்று ஒரு தனித்துவம் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

பாரதி ரஷ்யாவைப் பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் கூறியிருப்பதைத் தொகுத்துக் கொடுத்துவிட்டு அதன் மீது நமது ஆய்வை வெளியிடுவதே நோக்கமாகும்.

"புரட்சி என்ற சொல்லையும், புதுவுடைமை என்ற சொல்லையும் தமிழுக்குத் தந்தவர் பாரதியார்" என்று ஜீவா பலமுறை கூறியிருக்கிறார். வேறு புலவர்கள் இதுகாறும் இதனை மறுக்காததால் இது சரி என்றே தோன்றுகிறது.

நான் கற்றவரையில் இவ்விரு சொற்களையும் பாரதிக்கு முன்னர் எந்தக் கவிஞனும் பயன்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை. இவை இரண்டும் வெறும் சொற்கள் மட்டுமா? ஒரு மாபெரும் தத்துவத்தின் பெயருக்குத் தக்கதொரு தமிழ்ச் சொல்லை "பொதுவுடைமை" என உருவாக்கித் தந்த பெருமையை பாரதியார் பெற்றுவிட்டார்.

அது போன்றே "புரட்சி" என்ற சொல்லையும் தமிழுக்கு வழங்கி விட்டார். பாரதியார் இச்சொற்களை உருவாக்கியதுடன் சரியா? அல்லது இவற்றின் சாரத்தைப் புரிந்திருந்தாரா?

ரஷ்யாவைப் பற்றி புரட்சி பற்றி, பொதுவுடைமை பற்றி அவர் கொண்டிருந்த முழுமையான கருத்துதான் என்ன? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.

(இதன் தொடர்ச்சி அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடப்படும்)

1 comment:

  1. "பொதுவுடைமை இந்த உலகிற்கோர் புதுமை"

    பாரதி இந்த நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த
    அரும் பெரும் பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.

    அந்த பாரதி பொதுவுடைமை தத்துவத்தை தனது
    கவியோடு மட்டும் நில்லாது... வாழ்விலும் கடைபிடித்த
    அற்புதமான மனிதன்.

    பட்டி தொட்டியெல்லாம் இன்றும் அவன் புகழை, பெருமையை
    எந்த காழ்ப்புணர்வும் இல்லாமல், அவன் கொள்கையை
    அப்படியே புரிந்துக் கொண்டு அனைவரிடமும் அமரர் ஜீவாவின்
    வழியிலே கொண்டு செல்பவர்கள் இந்த பொதுவுடைமை வாதிகள் தான்
    அவர்களுக்கு இந்த தமிழுலகம் என்றும் கடமைப் பட்டிருக்கிறது.

    வெண்கலக் குரலோன் தா.பா அவர்களின் பேச்சும், எழுத்தும் என் போன்ற
    தமிழ் விரும்பிகளின் ஆர்வத்திற்கு சங்கநாதம் ஆகும்.

    பாரதி, மகாபுருஷன் அவன்
    மானுடம் பாடிய மஹாகவி
    எட்டயபுர கவிச் சிங்கம்
    தமிழினம் பெற்ற பெரும் பேறு...

    அவனின் கர்ஜனையை மட்டும்
    மனதில் நிறுத்தினால்
    எமனையும் எதிர்க்கலாம்.

    ஆராய்ச்சிக்கு உரியவன்
    அவன் ஒரு அறிவுச் சுரங்கம்
    அறிந்து தேடுவோருக்கு
    புதுப் புது பொருளைத் தரும்
    தங்க கருத்துச் சுரங்கம்.

    அற்புதப் பதிவு
    தொடர்ந்து தாருங்கள்...
    தமிழுலகம் பயனுறட்டும்.

    நன்றிகள் ஐயா!
    http://tamizhvirumbi.blogspot.com/

    ReplyDelete

You can send your comments