Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, October 14, 2011

பாரதியின் தேசாவேசம்

முதல் பிரசுரம்
(திரு ரா.அ.பத்மநாபன் அவர்கள் வெளியிட்ட சித்திரபாரதியிலிருந்து)

1904இல் சென்னை வந்தது முதலே பாரதியின் தேசாவேசம் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. வங்கப் பிரிவினை சமயம் 'வந்தேமாதரம்' கீதத்தை, 'இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!' என்று துவங்கும் முதல் மொழிபெயர்ப்பை, 1905 டிசம்பர் மாதம் 'சக்கரவர்த்தினி'யில் பாரதி வெளியிட்டார்.

இதற்கு இரண்டு மாதம் கழித்து, 1906 பிப்ரவரியில், 'எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பித்து ஒரு நூல் வெளியிடத் தாம் விரும்புவதாகவும், பழைய நூல்களிலுள்ள நாட்டு வர்ணனைகளல்லாமல் புதியனவான தேசபக்திப் பாடல்களைப் புனைந்தனுப்புமாறும் 'சுதேசமித்திர'னில் ஒரு வேண்டுகோள் வெளியிட்டார்.

பாரதி எதிர்பார்த்தபடி தேசியக் கவிதைகளை எவரும் அனுப்பவில்லை. ஆதலால், குறையை நிவர்த்திக்கும் பணியில் தாமே ஈடுபட்டுவிட்டார்! அவர் இயற்றிய பல தேசாவேசப் பாக்கள் 'மித்திர'னிலும், 'இந்தியா'விலும் இதரப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆயினும் கவிஞருக்குத் திருப்தியில்லை. தமது பாடல்களை நூல் வடிவில் வெளியிட ஆவலாயிருந்தார்; ஆனால் பணத்துக்கோ வழியில்லை என்ன செய்வது? தம் சிநேகிதரான ஜி.ஏ.நடேசனிடம் தம் மனக்குறையைத் தெரிவித்துக் கொண்டாராம். அதற்கு அவர், 'உங்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடியவர் வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரே. வேண்டுமானால் உங்களை அவரிடம் இன்றே அழைத்துச் செல்கிறேன்' என்றார்.

பழுத்த மிதவாதியும், தமது 'இந்தியா' பத்திரிகையில் வாரந்தோறும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகுபவருமான ஒரு அரசியல் எதிராளியிடம் இந்தச் சகாயத்துக்குப் போவதா? போனால்தான் பலிக்குமா? 'அவர் சதா என்னைப் பற்றிக் கோபத்துடன் பேசுகிறாராமே! எனக்கு அவரிடம் போக இஷ்டமில்லை' என்றார் பாரதி.

நடேசன் விடவில்லை. 'உங்களுக்கு அவர் சுபாவம் தெரியாது. உங்கள் பாட்டை அனுபவித்தாரானால் தகுந்த உபகாரம் செய்யாமல் இருக்க மாட்டார்' என்று திரும்பத்திரும்ப வற்புறுத்தி, அன்று மாலை பாரதியைக் கிருஷ்ணஸ்வாமி ஐயர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மயிலாப்பூரிலுள்ள தமது பங்களாவுக்கு முன்னால் திறந்த வெளியில் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர். சற்றே இருட்டிய சமயம் நடேசன் ஏதோ புது மனிதர் ஒருவருடன் வந்திருப்பதைக் கண்டு யாரென விசாரித்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர். ஐயரும் பாரதியும் முன்னர் சந்தித்ததில்லை. நடேசன் புன்முறுவலுடன், 'இவர் ஒரு தமிழ்க் கவிஞர், சில பாட்டுக்களை இயற்றியிருக்கிறார். நிச்சயம் கேட்பீர்கள் என்று அழைத்து வந்திருக்கிறேன்' என்றார். ஐயரின் குறிப்பறிந்து பாரதியைப் பாடச் சொன்னார் நடேசன். கணீரென்ற குரலில் பாரதி 'வந்தேமாதரம் என்போம்' என்ற பாட்டை நாதநாமக்கிரியையில் ஆனந்தக் களிப்பு மெட்டில் பாடத் தொடங்கினார். 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி' என்ற அடியில் நாற்காலியில் சாய்ந்திருந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்தபடி 'எந்தையும் தாயும்' என்று துவங்கும் நாட்டு வணக்கத்தைக் காம்போஜியிலும், முடிவாக 'மன்னும் இமயமலை' என்று துவங்கும் 'எங்கள் நாடு' பாட்டைப் பூபாளத்திலும் பாடி முடித்தார் பாரதி. கிருஷ்ணஸ்வாமி ஐயருக்கு உற்சாகம் தாங்கவில்லை. இவ்வளவு அழகான பாட்டுக்களை ஏன் நீர் ஊறப்போட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்! நாடெங்கும் பள்ளிகளிலும், பெண்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் தனிகர்களிடையிலும் இவற்றைப் பரவச் செய்ய வேண்டாமா? ஏன் சும்மா இருக்கிறீர்? என்று கேட்டார்.

நண்பர் நடேசன் கவிஞரின் நிலைமையை நயமாக விளக்கினார்; 'நீங்கள் உதவி செய்தால்....." என்றார்.

'அதற்கென்ன தடை? இதோ உங்களுக்கு நூறு ரூபாய். இந்த மூன்று பாட்டுக்களை அச்சிட்டு இனாமாக வழங்க ஆகும் செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் பெயர் என்ன?'

தர்மசங்கடமான நிலைமை, பாரதி நடேசனைப் பார்த்தார். அவரோ சிரிப்புடன் 'இவர்தான் அடிக்கடி 'இந்தியா' பத்திரிகையில் நீங்கள் வாசிக்கும் கட்டுரைகளின் ஆசிரியர் பாரதியார்' என்று தெரிவித்தார். எதிர்பார்த்தற்கு மாறாக கிருஷ்ணஸ்வாமி ஐயரும், 'தாங்கள்தான் சுப்பிரமணிய பாரதியாரா? என்ன உயர்ந்த தேசாபிமானம் தங்களிடம் தெரிகிறது. இது தெரியாமல் தங்களை வெறும் வெறிபிடித்தலையும் தீவிரவாதிகளில் ஒருவராக அல்லவோ நினைத்தேன்!' என்றாராம்.

அன்று பாரதி பாடிய மூன்று பாட்டுக்களையும் பதினையாயிரம் பிரதிகளுக்குமேல் அழகிய காகிதத்தில் அச்சிட்டு நாடெங்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் இலவசமாய் அனுப்பி வைத்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.

இந்த விவரங்களை வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரின் புதல்வர் கி.சந்திரசேகரன் தமது தந்தையின் சரித்திர நூலில் வெளியிட்டிருக்கிறார்.

பாரதியின் பாடல்கள் தனிப் பிரசுரமாக வெளிவந்தது இதுதான் முதல் தடவை. 1904இல் முதல் தடவையாக பாரதி பாடல் அச்சேறியது. 1907இல் முதல் தடவையாக பாரதி பாடல்கள் சிறு தனிப்பிரசுரமாக வெளியாயின.

1907இல் வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் வெளியிட்ட 'ஸ்வதேச கீதங்கள்' பதிப்பில் 'வந்தேமாதரமென்போம்' என்ற முதல் பாடலின் கடசிப் பா பின்னர் வந்த பதிப்புகளில் விட்டுப் போயிருக்கிறது.

"தேவி நம் பாரதபூமி - எங்கள்
தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள்
ஆவியுடல் பொருள் மூன்றும் - அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி -- வந்தே

என்பதுதான் விட்டுப்போன பா. ஆனால், இந்த 1907இல் பதிப்பில் இல்லாத 'புல்லடிமைத் தொழில் பேணி' என்ற பா தற்போதைய பதிப்புகளில் இருக்கிறது.

வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், சென்னை பிரசிடென்சி கல்லூரித் தமிழ்ச்சங்கத்தில் செய்த ஒரு பிரசங்கத்தைக் கேட்டே பாரதி 'செந்தமிழ் நாடு' என்ற தமது பாட்டைப் பாடியதாக, 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் தமது 'நினைவு மஞ்சரி'யில் கூறியுள்ளார். பிரசிடென்சி கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் பேச்சைக் கேட்டு பாரதி பாடியது 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்' பாடலாக இருக்க வேண்டும். 'செந்தமிழ் நாடு' பாடல், பாரதி புதுவையில் இருந்தபோது ஒரு போட்டிக்காக பாடப்பெற்றது. இரண்டாம் பரிசை பெற்றது.

தமிழ்ப் புலவர்களிடம் பாரதிக்கு அளவுமிக்க பரிவு உண்டு. சாமிநாதையர் மகாமகோபாத்யாய பட்டம் பெற்றபோது பாராட்டுக் கூட்டத்தில் பாரதி பாடிய பாடல் மறக்கவொண்ணாதது. அது சொற் பிழை, சுவைப்பிழை உளது என யாரோ (தவறாக) சொல்லிவிட, பாரதி கூட்டம் முடியுமுன்பே போய்விட்டார். கூட்ட முடிவில் சாமிநாதையர் பாடலை மிகவும் போற்றி, மீண்டும் கேட்க விரும்பினார்; பாரதி இல்லை.

மற்றொரு தமிழறிஞர் மு.ராகவையங்கார் 'செந்தமிழ்' பத்திரிகையில் 'வீரத் தாய்மார்கள்' என்று பழந்தமிழ் மாதரின் வீரத்தையும் நாட்டுப் பற்றையும் பற்றி எழுதியபோது பாரதி, 'தங்கள் புகழ் உலகறியும், தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்பிற்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்' என்று பாராட்டினார்.

பாரதிக்கு சாமிநாதையரிடமும், சாமிநாதையருக்கு பாரதியிடமும் இவ்வளவு மரியாதை இருந்தும், 1922இல் பாரதி காலமானபின், செல்லம்மா பாரதி வெளியிட்ட 'ஸ்வதேச கீதங்கள்' நூலுக்கு முகவுரை தருமாறு சாமிநாதையர் அணுகப்பட்டபோது, அவர் ஒப்பவில்லை. தாம் அரசாங்க கல்லூரியில் ஆசிரியர் என்ற காரணத்தால்!

(நன்றி: சித்திர பாரதி)

1 comment:

  1. ரா அ பதமனாபன் சேலத்துக்கு எங்கள் இல்லத்திற்கே வந்துள்ளார். கையில் கோல் கொண்ட பாரதிபடம், காரைக்குடிய்ல் எடுக்கப்பட்டது, எங்களில்லத்தில்
    இருந்த அசல் படத்தை எடுத்துச் சென்றார்.

    பதிவு அருமை.

    ReplyDelete

You can send your comments